சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை எப்படியாவது செயல்பட விடக்கூடாது என நினைத்தவர்களுக்கு பேரிடியாக சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் அணுமின்நிலையம் விரைவில் தனது உற்பத்தியை துவக்குவதுடன் தற்போது ஏற்பட்டு வரும் மின் பற்றாக்குறை விரைவில் தீரும் என பலர் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
பல ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்ட அணுமின்நிலையம் செயல்பட துவங்கும் நேரத்தில் இங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீனவ மக்களிடம் பீதியை கிளப்பி விட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தை தூண்டி விட்டனர். கூடங்குளம் , இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் பதட்டம் தொற்றிக்கொண்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் மத்திய, மாநில அரசு சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களிடம் விசாரிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. இந்த அறிக்கையின்படி அணு மின் நிலையத்தை துவக்கலாம், பாதுகாப்பு விஷயத்தில் அச்சப்படத்தேவையில்லை என தெளிவு படுத்தப்பட்டது.
முதலில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த மாநில அரசு தரப்பிலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் என்.ஓ.சி., என்ற சான்றை வழங்கி விட்டது. இப்போதாவது இந்த அணு உலையை தடுக்க வேண்டும் என்று கங்கணத்தோடு ஒரு பிரிவினர் சென்னை ஐ கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் போதிய பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதாக திருப்தி தெரிவித்தனர். அணு உலை பிரிவு- 1 மற்றும் பிரிவு 2 செயல்படலாம். இதற்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.